குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடைகால கொண்டாட்டம் இளைய தலைமுறையினரை படைப்பாளிகளாக உருவாக்க வேண்டும்

 

கோவில்பட்டி, மே 27:இளைய தலைமுறையினரை படைப்பாளிகளாக உருவாக்க வேண்டும் என்று கோவில்பட்டியில் நடந்த குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடைகால கொண்டாட்டம்நிறைவு விழாவில் கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கி.ரா நினைவரங்கத்தில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டம் கடந்த 20ம்தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. விழா நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் உதயசங்கர் தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் வரவேற்றார்.தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மஞ்சப்பைகளை வழங்கி பேசியதாவது:கோவில்பட்டி அதிக எழுத்தாளர்களைக் கொண்ட கரிசல் பூமியாகும்.

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் வாசகர் வட்டம் உருவாக்கி அதில் கரிசல் பூமி எழுத்தாளர்களை பங்கேற்க செய்து மாணவர்களை ஊக்கப்படுத்தி படைப்பாளிகளாக உருவாக்கிட வேண்டும். மாணவர்களின் ஆற்றலை கண்டுபிடிப்பதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களை படைப்பாளிகளாக உருவாக்கும் இடமாக மாறும் என்றார். இதில் உ.வே.சா.விருதாளர் நாறும்பூநாதன், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் ஹேமந்த் ஜோசன், ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் ஆசியா பார்ம்ஸ்பாபு, பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள், தலைமை ஆசிரியர்கள் ஜெயலதா, சண்முகராஜ், ஜான்கணேஷ், செல்வராஜ், பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் ஜான்சன் உள்பட கலந்து கொண்டனர். சிறார் இலக்கிய அமைப்பின் செயலர் பிரபு நன்றி கூறினார். இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சி நடந்தது.

The post குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடைகால கொண்டாட்டம் இளைய தலைமுறையினரை படைப்பாளிகளாக உருவாக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: