தோகைமலை, மார்ச் 29:அய்யர்மலை அருகே பாப்பக்காபட்டியில் நடந்த மகா மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.கரூர் மாவட்டம் அய்யர்மலை அருகே பாப்பக்காபட்டி மகா மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூச்சொரிதல் விழாவுடன் கோயிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு தொடர்ந்து 15 நாட்கள் கிராம மக்கள் விரதம் இருந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர்.பின்னர் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற மண்டகப்படி விழாவையொட்டி முத்து பல்லக்கு மற்றும் சிறப்பு வாகனங்களில் மாரியம்மன் கோயிலை சுற்றி வலம் வந்தார். அதனை தொடந்ந்து 15வது நாள் மாரியம்மனுக்கு குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்த குடங்கள் எடுத்து வந்து அம்மனுக்கு பால், இளநீர், குங்குமம், சந்தனம், விபூதி, தேன் திருமஞ்சனம், புனித தீர்த்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் செய்தனர்.