அழகர்கோவில், மார்ச் 22: சோலைமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மாவட்டம், அழகர்மலை உச்சியில் உள்ளது ஆறாவது படை வீடாக சோலைமலை முருகன் கோவில். இந்த கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று நடந்தது. இதில் அழகர்மலை அடிவாரத்தில் இருக்கும் 18ம் படி கருப்பணசாமி கோயிலின் முன்பிருந்து 108 பால்குடங்கள் மேளதாளம் முழங்க பக்தர்கள் பாதயாத்திரையாக எடுத்து சென்றனர். மலைப்பாதை வழியாக சென்று கோயிலை அடைந்தனர். அங்கு வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணியசுவாமிக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் நடந்தன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.