திருமண மண்டபத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

ஆத்தூர், மார்ச் 22: ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தில், தனியார் திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் மேலாளர் பழனிவேலுவின் செல்போனுக்கு, கடந்த 19ம் தேதி மதியம் 2 மணியளவில் பேசிய மர்ம ஆசாமி, திருமண மண்டபத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பேசி விட்டு தொடர்பை துண்டித்து விட்டார். பின்னர் 3 மணியளவில், மீண்டும் பேசிய அந்த நபர், ₹5 லட்சம் தந்தால் தான் வெடிகுண்டை செயலிழக்க செய்ய முடியும் என கூறினார். இதுகுறித்து பழனிவேலு, ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து உடனடியாக திருமண மண்டபத்திற்கு சென்ற போலீசார், வெடிகுண்டு ஏதேனும் வைக்கப்பட்டு உள்ளதா என தீவிர சோதனை நடத்தினர். ஆனால், மண்டபத்திற்குள் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, பழனிவேலுவின் போனுக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று, திருமண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த,  தலைவாசல் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Related Stories: