வலங்கைமான், மார்ச் 22:நெல் தரிசில் அடியுரம் இடமுடியாத இடத்தில் பயறுவகை பயிர்களுக்கு இலைவழி உரமிட்டு இருபது சதவீதம் அதிக மகசூலை பெறலாம் என வலங்கைமான் வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வலங்கைமான் வேளாண் உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: பயறு வகைப் பயிர்களில் இலைவழி உரமிடல் ஒரு முக்கியமான தொழில்நுட்பம் ஆகும். குறிப்பாக நெல் தரிசில் அடியுரம் இடமுடியாத நிலையில் இலைவழி உரமாக டி.ஏ.பி கரைசலை தெளிப்பதன் மூலம் இருபது சதம் மகசூலை அதிகரிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 5 கிலோ டி.ஏ.பி உரத்தினை 10-15 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து 250 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு இலைகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். இதன் மூலம் உரமிடும் செலவு குறைகின்றது. பூக்கும் தருணத்தில் அதாவது விதைத்த 25ம் நாள் ஒரு முறையும், காய்கள் பிடிக்கும் தருணத்தில் மறு முறையாக விதைத்த 40ம் நாள் தெளிக்கவேண்டும்.