மணமேல்குடி, மார்ச் 22: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மணமேல்குடியில் தொடங்கப்பட்டுள்ளது. மணமேல்குடி சந்தைப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் அலுவலர்களால் சுமார் 30 அடி நீளமுள்ள பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான வாசகங்களும், நூறு சதவீத வாக்களிக்க வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் என்று பெயரிடப்பட்டு அதில் வாக்காளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திடுவதற்காக இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கையெழுத்து இடுவதற்காக பெரிய வகை மார்க்கர் பேனாவும் இணைக்கப்பட்டுள்ளது.