வேலூர், மார்ச் 22: 2 நாட்களாக வெறிச்சோடிய நிலையில் வேலூர் மக்களவை தொகுதிக்கு 2 சுயேட்சை வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேலூர் மக்களவை தொகுதிக்கான வேட்பு மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரிடமும், அரக்கோணம் மக்களவை தொகுதிக்கான வேட்பு மனுவை கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ பார்த்தீபனிடமும் தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 2 நாட்களாக வேட்பாளர்கள் வராததால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், வேலூர் தொகுதியில் போட்டியிட 26 பேரும், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட 27 பேரும் மனுக்களை பெற்றுச்சென்றனர்.