மானாமதுரை, மார்ச் 21: பங்குனி மாதம் அம்மன்கோயில்களில் நடக்கும் பொங்கல் விழாவிற்கு மானாமதுரையில் அக்னிசட்டிகள், ஆயிரம்கண் பானைகள் தயாரிப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது. ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் வரும் சிவராத்திரி, மாசி களரி உற்சவங்களில் கிராம கோயில்களில் உள்ள குலதெய்வங்களுக்கு பொங்கல் விழாவும், பங்குனிமாதங்களில் மாரியம்மன் கோயில்களில் பங்குனிபொங்கல் விழாவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவில் கிராம காவல் தெய்வங்கள், குல தெய்வங்கள், மாரியம்மனுக்கு நேர்த்திக்கடனாக பக்தர்களால் அக்னிச்சட்டி, ஆயிரம்கண் பானை, கரும்பு தொட்டில் கட்டுவது போன்ற சடங்குகள் செய்யப்படுகின்றன. இதற்காக தேவைப்படும் அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை தயாரிக்கும்பணி தற்போது மானாமதுரையில் தீவிரமடைந்துள்ளது. அக்னிசட்டிகளில் அம்மன் முக அமைப்பு கொண்ட மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முகங்கள் செய்யப்படுகிறது. தெய்வ காரியம் என்பதால் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பில் மற்றவைகளை விட இவற்றிற்கு கூடுதல் கவனம் செலுத்தி தயாரிக்கப்படுவதுடன் அம்மன் முகங்கள் கோல்டு கலர் பெயிண்ட் பூசப்பட்டு விற்பனைக்கு தயார் செய்யப்படுகிறது.