தஞ்சை, மார்ச் 21: கடன் தள்ளுபடி வேண்டாம். விவசாய கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினாலே போதும் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். தஞ்சையில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசியல் கட்சிகள் கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு ஆதாயத்தை முன்னிறுத்தி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்போக்கு நாடெங்கும் வளர்ந்துவிட்டது. வாக்குக்கு பணம் வாங்கும் வாக்காளர்கள் கூடிவிட்டனர். பணம் கொடுக்காமல் வெற்றி பெற முடியாது என்ற நிலைக்கு கட்சிகள் தள்ளப்பட்டு விட்டன. இதனால் கட்சிகள். கொள்ளையர்களின் கூடாரங்களாகிவிட்டன. இது இந்திய ஜனநாயகத்துக்கு வந்திருக்கும் பேராபத்து. சுதந்திரத்தின் விலை மக்களுடைய விழிப்புணர்வு என்ற அடிப்படையில் வாக்காளர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் திருப்பூர் தொகுதியில் கொள்கை வேட்பாளராக கதிரேசன் நிறுத்தப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகரம் பல மாநில மக்கள் வசிக்கும் பகுதி. பல நாட்டவர் வந்துபோகும் இடம். எனவே இந்த தொகுதியில் கொள்கை வேட்பாளராக நிறுத்துவது பொறுத்தமானது.