தூத்துக்குடி, மார்ச் 21: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட அணிகளுக்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டம் கோவங்காடு கிராமத்தில் கடந்த 5 நாட்கள் நடந்தது. முகாமில் பங்கேற்ற நாட்டுநலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் குளம் தூர்வாருதல், கண்மாய் சீரமைப்பு, நீர்நிலை மேலான்மை விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு நடத்தினர். இதில் சிறப்பு கருத்துரையாளர்களாக மனநல மருத்துவர் சிவசைலம், மனநல ஆலோசகர் ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞர் சுபாஷினி, சமூக ஆர்வலர் ஜெகஜீவன், கர்னல் சுந்தரம், நாட்டுநலப்பணித்திட்ட பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம், காமராஜ் கல்லூரி வணிகவியல் துறை தலைவர் காசிராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர். நிறைவு விழாவிற்கு காமராஜ் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட தலைவருமான நாகராஜன் முன்னிலை வகித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் தலைமை வகித்தார்.