புதுக்கோட்டை, மார்ச்.20: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் அடைவு தேர்வு நடத்துவது குறித்து ஆய்வாளர்களுக்கான கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள அரசினர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா தலைமை தாங்கி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மாணவர்களின் கல்வித்திறனை ஆய்வு செய்வதற்காக வருகிற 25, 26 மற்றும் 28-ந் தேதிகளில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் 4, 7 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு தேர்வு நடைபெற உள்ளது. இதில் 4 மற்றும் 7-ம் வகுப்புக்கு நடைபெறும் அடைவு தேர்விற்கு ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளும், 9-ம் வகுப்பிற்கு நடைபெறும் அடைவு தேர்விற்கு ஒன்றியத்திற்கு 4 பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. ஒ.எம்.ஆர் படிவத்தில் மாணவர் மற்றும் பள்ளி சார்ந்த விவரங்களை சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கும் பூர்த்தி செய்ய வேண்டும். வினாவிற்கான விடையை மாணவர்கள் மட்டும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆய்வாளர்கள் ஆய்வறையில் ஆய்வு நடைபெறும் காலங்களில் சம்பந்தப்பட்ட மாணவர்களை தவிர மற்ற நபர்களை அனுமதிக்கக் கூடாது. ஆய்வானது காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்றார். கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமன், அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டார வளமைய பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.