மயிலாடுதுறை மார்ச் 20:மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தமிழ்வழி விண்ணப்பங்களை வழங்கக்கோரி நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். 17வது நாடாளுமன்ற தேர்தலுக்கான மயிலாடுதுறை தொகுதிக்கு மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்றிலிருந்து வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகியது. நேற்று காலை முதலே பரபரப்பாகிய ஆர்டிஓ அலுவலகத்தின் முன் இரண்டு பக்கங்களிலும் 100 மீ தூரத்திற்கு தடுப்பு அமைக்கப்பட்டது. டிஎஸ்பி வெள்ளதுரை, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கண்மணி ஆகியோர் முன்னேற்பாடுகளை பார்வையிட்டனர். வேட்பு மனு தாக்கல் துவங்கும் என்ற இருந்த நேரத்தில் நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் இரணியன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அதில் 11 நபர்களுக்கு தமிழில் விண்ணப்பம் வழங்கப்பட்டது, மீதமுள்ள நபர்களுக்கு விண்ணப்பம் ஆங்கில வழியாக இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்களுக்கும் தமிழில்தான் விண்ணப்பம் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். வேட்புமனு கேட்டு விண்ணப்பம் அளித்ததையும் அதிகாரிகள் வாங்கவில்லை. தமிழில் மனு வந்தபிறகு உங்களிடம் விண்ணப்பத்தை வாங்கிக் கொள்கிறோம் என்று மறுத்துவிட்டனர். இதைக் கேட்ட தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கண்மணி, இந்த நிலம் நீர் பாதுகாப்பு அமைப்பினர் அனைவரையும் அழைத்து, தமிழ் விண்ணப்பங்கள் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது. மாலை வரை பொறுத்திருந்து வாங்கிச்செல்லலாம் என்று கூறியதால் அனைவரும் அமைதியாகினர்.