தமிழகம் முழுவதும் 1500 தேர்தல் பறக்கும்படை வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்

வேலூர், மார்ச் 20: மக்களவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 1500 தேர்தல் பறக்கும்படையினர் செல்லும் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் நடத்தைகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் ஒரு பிடிஓ அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில் 2 போலீசார், ஒரு வீடியோ கிராபர் இடம் பெற்றுள்ளனர். மேலும் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பறக்கும் படையினரின் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இவர்கள் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். ஆனால் ஒரே இடத்தில் இருந்தபடி சோதனையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவர்களை கண்காணிக்கும் வகையில் அவர்களது வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கருவிகள் மூலம் அவர்கள் இருக்கும் இடம், நேரம் போன்றவை கண்காணிக்கப்படும். அதன்படி, தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 1500 பறக்கும்படை, கண்காணிப்புக்குழு வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

Related Stories: