திருமயம், மார்ச் 19:புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஆனைவாரி கிராமத்தை சேர்ந்தவர்கள் காந்தி(65). இவரது மகன்ராமையா(35). இவர்களுக்கும் அதே தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பூசையா (47) குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று பூசையா தரப்பினர் பொதுப் பாதையில் ஜல்லி கற்கள் கொட்டி வைத்துள்ளனர். இதனை அள்ளும்படி காந்தி கேட்டுக் கொண்ட போது இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஏற்கனவே இரு குடும்பங்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்த நிலையில், இந்த பிரச்னை கைகலப்பை நோக்கி சென்றது. இதனை அறிந்த பக்கத்து வீட்டுக்காரரான ராமசாமி மகன் அன்பில் முத்து (40) இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அன்பில் முத்து மீது ஆத்திரமடைந்த பூசையா தரப்பினர் அரிவாள், உருட்டை கட்டை கொண்டு தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.