சிவகங்கை, மார்ச் 19: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமமுக வேட்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டது. சிவகங்கை மக்களவை தொகுதியில் அமமுக வேட்பாளராக தேர்போகி பாண்டி போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் நேற்று மதுரையில் இருந்து கார் மூலம் திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர் வழியாக வந்தார். வரும் வழியில் அவருக்கு கட்சி தொண்டர்கள் வரவேற்பளித்தனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி கூடுதல் காரில் வந்தது, வெடி வெடித்தது குறித்து திருப்புவனம்புதூர் விஏஓ பீமன் கொடுத்த புகாரின்பேரில் வேட்பாளர் தேர்போகி பாண்டி, முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன்கென்னடி, அமமுக மாவட்ட செயலாளர் உமாதேவன் மற்றும் அமமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோல் மானாமதுரையில் பறக்கும்படை தாசில்தார் செந்தில்வேல் கொடுத்த புகாரின் பேரிலும், விஏஓ மகேந்திரவர்மன் கொடுத்த புகாரின் பேரிலும், சிவகங்கையில் விஏஓ கவுரிசங்கர் கொடுத்த புகாரின் பேரிலும் மேற்கண்டவர்கள் மற்றும் அமமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோல் காரைக்குடியிலும் தேர்தல் விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.