தேனி, மார்ச் 19: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேனியில் வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சியில் அப்பாவி மாணவியர், வேலைக்கு சென்ற இளம்பெண்களை குறிவைத்து சுமார் 200க்கும் மேற்பட்டவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பாரபட்சமின்றி கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி, கல்லூரி மாணவ அமைப்பினர், சமூக தொண்டு நிறுவனத்தினர், அதிமுக, பாரதீய ஜனதா தவிர இதர அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன்பாக தேனி மாவட்ட வக்கீல் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.