விருத்தாசலம், மார்ச் 19: நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் விருத்தாசலம் சார்ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. விருத்தாசலம் தாசில்தார் கவியரசு தலைமை தாங்கினார். தேர்தல் துணை வட்டாட்சியர் அன்புராஜ், மண்டல துணை வட்டாட்சியர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் வரவேற்றார். விருத்தாசலம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அச்சக உரிமையாளர்களுக்கு பேனர், போஸ்டர்களில் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். ரூ.50 ஆயிரத்திற்கும் மேலாக பணம் கொண்டு போகும்போது உரிய ரசீது கொண்டு செல்லவேண்டும். மேலும் ரூ.10ஆயிரத்திற்கும் மேல் பொருட்கள் வாங்கினால் அவர்கள் விவரத்தை பெறவேண்டும். டோக்கன் வாங்கிக்கொண்டு பொருட்கள் தரக்கூடாது. பெட்ரோல் பங்குகளில் டோக்கன் முறையில் பெட்ரோல் வழங்கக்கூடாது. திருமண மண்டபங்களில் எந்தவித அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளை சார்ந்த பேனர்கள் வைக்ககூடாது. திருமண மண்டபங்களில் வைத்து இலவச பொருட்கள் வழங்க கூடாது. விருத்தாசலம் தெற்கு, வடக்கு, ஊமங்கலம், மங்கலம்பேட்டை உள்ளிட்ட குறுவட்டங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர். விருத்தாசலம் கிராம நிர்வாக அலுவலர் கெங்காசலம் நன்றி கூறினார்.