மன்னார்குடி, மார்ச்12: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் உள்பட டெல்டா மாவட்டங்களில் பருவமழை பொய்த்து போனதாலும், காவிரியில் உரிய நேரத்தில் நீர் வராத காரணத்தினாலும், குறுவை சாகுபடி கடந்த 7, 8 ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் பொருளாதார ரீதியில் தொடர்ந்து வருவாய் இழப்பை சந்தித்து வந்தனர். சம்பாசாகுபடியும் ஒவ்வொரு ஆண்டும் கேள்விக் குறியுடன் நடைபெற்று பல்வேறு காரணங்களால் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள திருமக்கோட்டை, ஒரத்தூர், திருமக்கோட்டை, மேல நத்தம், பாளையக்கோட்டை, தென்பரை, மகாராஜ புரம், வல்லூர், எளவனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பணப்பயிரான உளுந்து, பயறு சாகுபடியை விவசாயிகள் நம்பிக்கையுடன்
மேற்கொண்டுள்ளனர். பல இடங்களில் உளுந்து பயர்கள் நன்கு வளர்ந்து வந்தது. இந்நிலையில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, பயறு சாகுபடியில் திடீரென பூச்சி தாக்குதல் ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த ஆண்டு கோட்டூர் ஒன்றியம் உள்பட திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 55 ஆயிரத்து 500 ஏக்கரில் உளுந்து சாகுபடியும், 36 ஆயிரத்து 500 ஏக்கர்களில் பயறு சாகுபடியும் நடைபெற்றுள்ளது.