கும்பகோணம், மார்ச் 6: கும்பகோணத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த கொத்தனாரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ராம்நிவாஸ் மகன் அசோக்குமார் (20). இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2 மாதங்களாக கட்டிட வேலையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் பைராகி தோப்பு பகுதியில் அசோக்குமார் நடந்து சென்றார். அப்போது தமிழ் மொழி தெரியாதா, எங்களிடம் தமிழில் பேச வேண்டுமென 4 வாலிபர்கள் தகராறு செய்தனர். மேலும் அசோக்குமார் தாக்கி விட்டு செல்போனை பறித்து விட்டு சென்றனர். படுகாயமடைந்த அசோக்குமார், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் அசோக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் சிவகுருநாதன் தெருவை சேர்ந்த ஸ்ரீநாத் (20), அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த ரமேஷ் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மலர்வாணன், பிரவின்குமாரை தேடி வருகின்றனர்.