இலுப்பூர், மார்ச் 6: இலுப்பூர் பகுதியில் உள்ள சிவன்கோயில்களில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசி நாதர் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. பட்டினத்தாரால் பாடப்பெற்ற இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நேற்று அதிகாலை வரை நான்கு கால பூஜைகளாக நடைபெற்றது. இதற்காக யாக சாலை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு முதல் கால பூஜை, இரவு 11 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு 1.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை,நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால பூஜையாக நடைபெற்றது.