நாமகிரிப்பேட்ைட, மார்ச் 1: நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி ஆத்துமேடு பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள இருக்கைகள் முழுவதும் சேதமடைந்துள்ளதால், பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவதில்லை. இதனால், இந்த நிழற்கூடம், குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் உள்ள மாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு செல்லவும், விவசாயிகள் உழவர் சந்தைக்கு செல்லவும், இந்த பஸ் ஸ்டாப்பை தான் பயன்படுத்துகின்றனர். தற்போது இந்த நிழற்கூடம் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குடிமகன்கள் பாராக பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நிழற்கூடத்தை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.