பெரம்பலூர், மார்ச் 1: பெரம்பலூரில் பெண்களுக்கு நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா நடந்தது. மதியம் நடந்த விழாவிற்கு காலையிலேயே வந்து பயனாளிகள் காத்து கிடந்தனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் 286 நபர்களுக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் பூங்கொடி தலைமை வகித்தார். விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு பயனாளிகளுக்குத் தாலிக்கு தங்கத்தையும், நிதியுதவிக்கான காசோலைகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார். 10வது, 12வது படித்த 186 பயனாளிகளுக்கும், பட்டம் மற்றும் பட்டய படிப்பு படித்த 100 பயனாளிகளுக்கும் என மொத்தம் 286 பயனாளிகளுக்கு நிதியுதவியோடு காசோலைகள் வழங்கப்பட்டன.