நீடாமங்கலம்,பிப்.28: நீடாமங்கலம் கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு சுற்றுச்சூழல் துறை தலைமை இயக்குனருக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார்.அதில் கூறியி ருப்பதாவது. கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் கோடிக்கணக்கான மரங்கள் இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போய் விட்டது. பள்ளி வளாகம் முழுவதும் தற்போது மரங்கள் இல்லாததால் மாணவர்கள் ,ஆசிரியர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். அரசு அலுவலக வளாகத்திலும் மரங்கள் இன்றி வறண்ட நிலையே காணப்படுவதால் அன்றாட பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.கோடைவெப்பம் தாக்கம் குறைக்கப்பட வேண்டுமானால் கோடிக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட வேண்டும். பொது நல அமைப்புகள் மரங்கள் வளர்ப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து சமூக ஆர்வலர்கள் விதைகள் மற்றும் மரக்கன்றுகளை டெல்டா பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.விதைகள் அனுப்புவோர்களுக்கு அஞ்சல்துறை மற்றும் தனியார் கூரியர் நிறுவனங்கள் கட்டணமில்லா சேவைகள் செய்ய முன்வர வேண்டும்.