காரைக்கால், பிப்.28: காரைக்கால் அரசு மருத்துவமனை, ஜிப்மர் நிதியை கொண்டு விரைவில் மேம்படுத்தப்படும் என, புதுச்சேரி நலத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.காரைக்கால் மாவட்ட அரசு பொதுமருத்துவமனை கடந்த பல ஆண்டுகளாக கோமா நிலையில் இருப்பதாகவும், அதனை உடனே சீரமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி காரைக்கால் கிளையில் உள்ள மாணவர்கள், காரைக்கால் அரசு மருத்துவமனையை பயன்படுத்தி கொள்ளும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனையை சீர்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்தது. இருந்தும், காரைக்கால் அரசு மருத்துவமனையை சீரமைக்கும் பணி தொடங்காமலே இருந்துவந்தது. மேலும், காரைக்கால் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி கிளை ஏனம் பிராந்தியத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, காரைக்கால் போராட்டக்குழு குற்றம் சாட்டிவந்தது.