முத்துப்பேட்டை, பிப்.20: முத்துப்பேட்டையில் சாலை பணியை துவங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பறைசாற்றி ஊர்வலம் செல்ல முயற்சித்தனர். போலீசார் தடுத்ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியின் 5 வார்டுகளை இணைக்கும் பங்களா வாசல் முதல் பேட்டைவரை உள்ள பேட்டை சிமென்ட் சாலை, குண்டும் குழியுமாக மாறி சேதமானதால் சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து சென்றாண்டு ரூ.98லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பேட்டை சிமென்ட் சாலையை வடிகால் வசதியுடன் தார்சாலையாக போட டெண்டர் விடப்பட்டது. பணி துவங்க வில்லை.இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்தது.
இதனையடுத்து சாலைப்பணியை துவங்க ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்து அளவீடு செய்ய பேரூராட்சி அதிகாரிகள் தீர்மானித்து சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்தனர். மேலும் சாலை பணிக்கு இடையூறாக மின்வாரிய அதிகாரிகள் தெற்குதெரு அருகே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக புதிய டிரான்ஸ்பார்மரை அமைத்தனர். புதிய மின்கம்பங்களும் நடபபட்டுள்ளது. இதனால் பணி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு பணி முடங்கி கிடப்பில் போடப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பறைசாற்றி ஊர்வலம் சென்று நூதனப்போரட்டம் நடத்த முடிவு செய்து பேட்டை சிவன்கோயில் அருகே கூடினர்.