அரக்கோணத்தில் பரபரப்பு: ரயில் தாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து பெண்கள் மறியல்

அரக்கோணம், பிப்.20: அரக்கோணத்தில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து பெண்கள் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் காலை 6.55 மணிக்கு பெண்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் அரக்கோணத்திலிருந்து திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்ட நேரத்தில் இயக்கப்படுவதில்லையாம். மேலும், இந்த ரயில் சென்னை செல்வதற்கும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் ரயிலில் செல்லும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பெண்கள், சிறப்பு ரயிலில் செல்வதற்காக அரக்கோணம் வந்தனர். 6.55 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் புறப்படவில்லை. இதையடுத்து சிறிது நேரம் ரயில் பெட்டியில் காத்திருந்த பெண்கள் 7.15 மணியாகியும் ரயில் புறப்படாததால் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ரயில் நிலைய அதிகாரிகள், ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள் அதிகாரிகளிடம் நாள்தோறும் இந்த ரயிலானது காலதாமதமாக இயக்கப்படுகிறது. குறித்த நேரத்தில் இயக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினர்.

‘அதற்கு அரக்கோணம் ரயில் நிலைய யார்டு பகுதியில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து செல்லும் ரயில்கள் யார்டு பகுதியில் 10 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் புறப்பட்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் குறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் இயக்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். பின்னர் 7.40 மணியளவில் ரயில் இயக்கப்பட்டது. பெண்கள் திடீரென ரயில் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: