மாந்தோப்பில் 5 யானைகள் அட்டகாசம் பேரணாம்பட்டு அருகே

பேரணாம்பட்டு, மே 7: பேரணாம்பட்டு அருகே மாந்தோப்பில் புகுந்து அட்டகாசம் செய்த 5 யானைகளை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த குண்டலபல்லி, ரங்காம்பேட்டை, அரவட்லா, பாஸ்மர்பெண்டா, டி.டி.மோட்டூர், சாரங்கல் உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. எனவே, தண்ணீர் மற்றும் உணவை தேடி கொண்டு வரும் காட்டு யானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகின்றன. அவற்றை வனத்துறையினர் விரட்டியடித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் பேரணாம்பட்டு அடுத்த ரங்காம்பேட்டை கிராமத்தில் திடீரென நுழைந்த 5 காட்டு யானைகள் அங்குள்ள 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட மா மரங்களின் கிளைகளை முறித்தும், மாங்காய் சாப்பிட்டும் சேதப்படுத்தின. தொடர்ந்து, பக்கத்து நிலத்தில் 6க்கும் மேற்பட்ட மா மரங்களின் கிளைகளை உடைத்தும், நிலத்தில் அமைத்து இருந்த வேலி மற்றும் கம்பங்களை உடைத்து சேதப்படுத்தின. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் சுமார் ஒருமணி நேரம் போராடி பட்டாசுகள் வெடித்தும், டார்ச் லைட் அடித்தும் 5 யானைகளையும் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

The post மாந்தோப்பில் 5 யானைகள் அட்டகாசம் பேரணாம்பட்டு அருகே appeared first on Dinakaran.

Related Stories: