நண்பர்களுடன் குளித்தபோது ஏரியில் மூழ்கி சிறுவன் பலி பேரணாம்பட்டு அருகே சோகம்

பேரணாம்பட்டு, மே 11: பேரணாம்பட்டு அருகே நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி அருகே உள்ள செண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(35), கூலித்தொழிலாளி. இவரது மகன் ரோஜார்(8). அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்த ரோஜார் நேற்று முன்தினம் மாலை, பக்கத்து வீடுகளில் வசிக்கும் 3 சிறுவர்களுடன் அருகில் உள்ள பொன்னியம்மன் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். தொடர்ந்து, ஏரியில் இறங்கி குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற ரோஜார் திடீரென நீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் சென்ற மற்ற சிறுவர்கள் கத்தி கூச்சலிட்டனர். சிறுவர்களின் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று ஏரியில் இருந்து ரோஜாரை மீட்டனர். உடனே அவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ரோஜார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஏரியில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post நண்பர்களுடன் குளித்தபோது ஏரியில் மூழ்கி சிறுவன் பலி பேரணாம்பட்டு அருகே சோகம் appeared first on Dinakaran.

Related Stories: