கந்தர்வகோட்டை,பிப்.15: கந்தர்வகோட்டை அங்கன்வாடி மையத்தில் சமையலரை மாற்றியதால் பிள்ளைகளை அனுப்ப மறுத்த பெற்றோர்களால் பரபரப்பு ஏற்பட்டது.கந்தர்வகோட்டை ராஜாப்பட்டியில் இயங்கி வரும் அங்கன்வாடியில் கடந்த மூன்றரை வருடங்களாக அமராவதி என்பவர் அரசு பணியில் அமர்த்தா விட்டாலும் சமையலராக பணிபுரிந்து வந்துள்ளார். அரசு பணியமர்த்தும் போது சட்டப்படி பணியமர்த்தப்படுவீர்கள் என்ற அடிப்படையில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அங்கன்வாடி பணியாளர்கள் 26பேர் மற்றும் உதவியாளர் 18 பேர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் ராஜாப்பட்டியில் அமராவதிக்கு பதிலாக சித்ரா என்பவரை நியமனம் செய்துள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கன்வாடி மையத்திற்கு தங்கள் குழந்தைகளை அனுப்பாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் நேற்று முன்தினம் கந்தர்வகோட்டையில் இயங்கி வரும் அங்கன்வாடி அலுவலகத்திற்கு நேரிடையாக சென்று முறையிட்டனர்.