சேந்தமங்கலம் பேரூராட்சியில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி

சேந்தமங்கலம், பிப்.14: சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியில், 50 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சேந்தமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் அசோக்குமார் தலைமையில், இளநிலை உதவியாளர் தேவராஜ், சுகாதார ஆய்வாளர் சந்திரகுமார், துப்புரவு மேற்பார்வையாளர் அழகுராஜா மற்றும் பணியாளர்கள் பேரூராட்சி பகுதியில் உள்ள ஓட்டல், மளிகைக்கடை, பெட்டிக்கடை, பேக்கரி மற்றும் பழக்கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் மற்றும் கேரி பேக்குகள் பயன்பாட்டில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. கடை உரிமையாளர்கள் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. இதுபோன்ற நடவடிக்கையில் தொடரந்து ஈடுபடுவோருக்கு, அபராதம் விதிக்கப்படும் என செயல் அலுவலர் எச்சரித்தார்.

Related Stories: