மானாமதுரை, பிப்.7: பசுமை வீடு, இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின்கீழ் துவக்கப்பட்ட புதிய வீடுகள் கட்டும் பணிக்கு போதிய நிதி ஒதுக்காததால் பயனாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பயனாளிகள் கிராம ஊராட்சிகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு சொந்த இடத்தில் வீடுகட்ட அனுமதி வழங்கப்படுகிறது. இதன்படி வீடுகட்டுவோர் பேஸ்மென்ட், காங்கிரீட், முழுப்பூச்சு என கட்டுமானத்தின் மூன்று கட்டங்களில் பணம் வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகளில் பசுமை வீடுகள் திட்டத்தில் 350க்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த அக்டோபர் மாதம் துவக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன.இத்திட்டத்தின் கீழ் பணிகளை துவக்கியவர்களுக்கு முதல்கட்டமாக வழங்கப்பட்ட தொகைக்கு பின் இரண்டாம் தவணை, மூன்றாம் தவணை தொகைகள் வழங்கப்படவில்லை. இதனால் கடன் வாங்கி கட்டுமானப்பணிகளை மேற்கொண்ட பயனாளிகள் கடன், வட்டி கட்ட முடியாமல் தவிக்கின்றனர்.