குன்றத்தூர், பிப். 5: 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், வாலிபர் பரிதாபமாக பலியானார். உயிரிழந்தார்.தூத்துக்குடியை சேர்ந்தவர் முருகப்பெருமாள் (25). தனியார் கல்லூரியில் படித்து முடித்து விட்டு, பெருங்களத்தூரில் உள்ள உறவினரின் பேக்கரியை கவனித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முருகப்பெருமாள், குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள தனது நண்பரை பார்க்க பைக்கில் சென்றார். பின்னர் அங்கிருந்து பெருங்களத்தூர் புறப்பட்டார். திருமுடிவாக்கம் - தாம்பரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே திருநின்றவூரை சேர்ந்த கிருஷ்ணன் (30) என்பவர் பை்ககில் வந்து கொண்டிருந்தார்.அப்போது, எதிர்பாராதவிதமாக 2 பைக்குகளும் நேருக்கு, நேர் மோதிக்கொண்டது. இதில், தூக்கி வீசப்பட்ட முருகப்பெருமாள் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கிருஷ்ணன் லேசான காயமடைந்தார். இந்த விபத்தில் கிருஷ்ணனின் பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது.