* சிசிடிவி கேமராக்கள் இல்லை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடம் மற்றும் முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் இதுவரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. ரயில் நிலையங்களில் குற்றச் சம்பவங்கள் நடந்தால் அதை கண்டுபிடிப்பது ரயில்வே போலீசாருக்கு சவாலாக உள்ளது. அதேபோல், குற்றவாளிகள் ரயில்களில் ஏறி தப்பினால் அவர்களை பிடிப்பதும் சவாலாக உள்ளது. மேலும், சிசிடிவி கேமராக்கள் இருந்தால் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் குறையும். எனவே, பொதுமக்கள் அதிகம் புழங்கும் முக்கிய இடமான காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
* பொலிவு இல்லாத முகப்பு பலகை
ரயில்வே சாலை மற்றும் காமாட்சி அம்மன் கோயில் சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரயில் நிலைய வளாகத்திற்குள் நுழையும் பகுதியில் ரயில் நிலைய முகப்பு பலகை உள்ளது. இந்த, முகப்பு பலகை வைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பொலிவிழந்து எழுத்துக்கள் தெளிவாக தெரியவில்லை. இதனால், புதிதாக ரயில் நிலையத்திற்கு வரும் வெளியூர் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
* கூடுதல் மேற்கூரை வசதி வேண்டும்
தினந்தோறும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் பழைய ரயில் நிலையத்தில், போதுமான இருக்கை வசதி இல்லாததால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் நிற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பிளாட்பாரம் பகுதியில் மேற்கூரை இல்லாததால் வெயில் மற்றும் மழை காலங்களில் மிகவும் சிரமமாக உள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
* மினி பேருந்து இயக்கப்படுமா?
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள பேருந்து நிலையத்திற்கு செல்ல ஆட்டோக்களில் ரூ.150 முதல் அதற்கும்மேல் ஆட்டோக்காரர்கள் வசூலிக்கின்றனர். எனவே, ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு மினி பேருந்துகளை பயணிகளின் நலன் கருதி இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
* புறக்காவல் நிலையம்
காஞ்சிபுரத்தில் குடியிருப்புகள் மற்றும் பேருந்து நிலையம் அருகில் இந்த ரயில் நிலையம் இருப்பதால், பெரும்பாலானோர் இந்த ரயில் நிலையத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், இரவு 9 மணிக்கு மேல் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் இருந்து வரும் குடிமகன்கள் ரயில் நிலையத்தை பாராக மாற்றி விடுகின்றனர். இதுகுறித்து, ரயில் பயணிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், ரயில் நிலைய வளாகம் எங்கள் கட்டுப்பாட்டில் வராது. செங்கல்பட்டில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும் என்று தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் குடிமகன்கள் அட்டகாசத்தால், இரவில் வரும் பயணிகள் அச்சத்துடன் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுகின்றனர். எனவே, காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
The post குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள் உள்பட அடிப்படை வசதிகள் இல்லாத காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம்: நடவடிக்கை எடுக்க ரயில் பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.