நாமக்கல், பிப்.2:சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இன்ஜினியர் கோகுல்ராஜ், கடந்த 2015 ஜூன் 24ம் தேதி, பள்ளிப்பாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5 மாதமாக நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தோழி சுவாதி, கடந்த செப்டம்பர் 10ம் தேதி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, அவர் கோகுல்ராஜ் யார் என்று தனக்கு தெரியாது எனவும், சிசிடிவியில் பதிவாகியுள்ள உருவம் தான் இல்லை எனவும் சாட்சியம் அளித்தார்.