ஆலங்குடி, ஜன. 23: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் உள்ள குதிரை சிலைக்கு ஆண்டுதோறும் அணிவிக்கப்பட்டு வந்த ஜிகினா மாலைக்கு இந்தாண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பில் குளமங்கலத்தில் உள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் 33 அடி உயரத்தில் குதிரை சிலை உள்ளது. ஆசிய அளவில் புகழ்பெற்ற இந்த குதிரை சிலைக்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் மகரம் நட்சத்திரத்தையொட்டி 2 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்நிலையில் அடுத்த மாதம் 19ம் தேதி திருவிழா நடைபெறவுள்ளது. இத்திருவிழாவின்போது குதிரை சிலைக்கு 1,200க்கும் மேற்பட்ட ஜிகினா மாலைகள் அணிவிக்கப்படும். இந்தாண்டு முதல் ஒருமுறையே பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதால் குதிரை சிலைக்கு ஜிகினா மாலை அணிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.