மதுரை, ஜன.22: மதுரை மாநகருக்கு ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் உள்ளிட்ட மத்திய அரசின் சிறப்பு திட்டங்களில் இடம் கிடைத்தது. இதன் மூலம் மாநகராட்சி பரிந்துரைத்த ரூ.1020 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதில் ரூ.356 கோடி திட்ட பணிகளுக்கு 2 நாட்களுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் ரூ.160 கோடியில் பெரியார் பஸ்ஸ்டாண்ட் மறு சீரமைப்பு உள்பட 9 திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் மக்கள் பெரிதும் எதிர்பார்த்த பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்துக்கோ, போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க கூடிய கோரிப்பாளையம் பறக்கும் பாலம் உள்ளிட்ட மேம்பால திட்டங்களுக்கோ அடிக்கல் நாட்டப்படவில்லை. முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வெளியேறும் லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு 158 கி.மீ. தூரம் குழாய் அமைத்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை 2017 ஜூலையில் அறிவித்து அரசின் சாதனை பட்டியலில் வெளியிடப்பட்டது. மதுரை மாநகருக்கும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் 35 லட்சம் மக்கள் குடிநீர் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு ஏற்படும் என்று மதுரை மாவட்ட அமைச்சர்கள் வாக்குறுதி அளித்தனர்.