பாபநாசம், ஜன.11: பாபநாசம் அடுத்த அம்மாப்பேட்டை புத்தூரில் விவசாயிகளுக்கு நெல் வயல்வெளி பள்ளி நடந்தது.இதில் திருந்திய நெல் சாகுபடிக்கு நாற்றாங்கால் தயாரிப்பு, சதுர நடவுமுறை, களை கட்டுப்பாடு, இயற்கைவழி பூச்சி நோய் கட்டுப்பாட்டு முறை, மண் புழு உரம் உற்பத்தி செய்து பயன்படுத்தும் முறை, வரப்பில் உளுந்து, வெண்டை, துவரை போன்ற பயிர்கள் சாகுபடி செய்து அதன்மூலம் பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும் முறை, களை மேலாண்மை முறை, அறுவடைக்குப்பின் மதிப்பூட்டும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு விதை, இரண்டரை கிலோ உயிரி உரங்கள், பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளில் 3 பேரை தேர்வு செய்து குடுமியான்மலையில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகள் குறித்த சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அம்மாப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா, வேளாண் அலுவலர் ராஜதுரை தலைமையில் உதவி அலுவலர்கள் சூரியமூர்த்தி, அண்ணாமலை, சரவணன், சிற்றரசன் செய்திருந்தனர்.