மயிலாடுதுறை, ஜன.11: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த 2009 முதல் பாதாள சாக்கடைத்திட்டம் முழுமையான செயல்பாட்டிற்கு வந்தது. தரமான பொருட்களை கொண்டு இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்த திட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று நகர்நலவாசிகளால் புகார் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. தற்போது பாதாள சாக்கடை திட்டத்தின் பராமரிப்பு பணியை, பாதாள சாக்கடை கட்டிய அதே நிறுவனமே செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. பாதாள சாக்கடை பைப் உடைந்து அதற்குள் மண் உள்வாங்கியதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டது, கச்சேரி சாலையை தொடர்ந்து ஜூலை மாதத்தில் தரங்கை சாலை, கிளைச்சிறைச்சாலை அருகே, அய்யாரப்பர் கீழவீதி போன்ற இடங்களில் பைப்புகள் பழுதாகி உடைந்து கழிப்பறைநீர் வெளியேறியது தெரியவந்தது. அவற்றை பல வாரங்களுக்கு பிறகே சீரமைத்தனர். கழிவுநீரைக் கொண்டு செல்லும் பைப்புகள் முற்றிலும் தரமற்று இருப்பதால் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு நகராட்சிக்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சலை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் கஜா புயலின்போது டபீர் தெரு முனையில் தரங்கை சாலையில் இதே போன்று திடீர்பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பல தெருக்கள் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதைவிடுத்து கடந்த டிசம்பர் 7ம் தேதி மீண்டும் கிளைச்சிறைச்சாலை அருகில் பாதாள சாக்கடை பைப்லைன் உடைந்து போக்குவரத்தை தடைசெய்தது. அவற்றை செரிசெய்து சரியாக ஒரு மாதத்தில் நேற்று தரங்கை சாலை கொத்தத் தெரு பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டது. பாதாள சாக்கடையால் முக்கிய சாலைகளில் பள்ளம் ஏற்படுவது இது 7வது இடமாகும்.