ஆண்டிபட்டி,ஜன.11: ஆண்டிபட்டி அருகே 8 மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராமமக்கள் 200க்கும் மேற்பட்டோர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜதானி காவல்நிலையத்தில் காவல்துறை, வட்டார வளர்ச்சி அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆண்டிபட்டி அருகே ராஜதானி ஊராட்சியில் கீழ மஞ்சிநாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ளவர்களில் சிலர் விவசாயிகளாகவும், பலர் விவசாயக் கூலி வேலையும் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் குடிநீர் தேவைக்காக பல கிலோ மீட்டர் தூரங்களில் உள்ள விவசாய நிலங்களை மக்கள் தேடிச் சென்றனர். மேலும் குடிநீர் இல்லாமல் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இது சம்பந்தமாக ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தேனி மாவட்ட கலெக்டர் ஆகிய அலுவலகங்களில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பலமுறை சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி குறைகளை சரி செய்து தருவதாக கூறி விட்டு செல்கின்றனர். ஆனால், பிரச்னை தீராமல் இருந்தது.