சிவகங்கை, ஜன.3: சிவகங்கை மாவட்டத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் ஏராளமான மாணவ, மாணவிகள் பாதிப்படைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, பூலான்குறிச்சி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருபாலரும் படிக்கும் அரசு கலைக்கல்லூரியும், சிவகங்கையில் மகளிர் அரசு கலைக்கல்லூரியும் என மொத்தம் நான்கு அரசு கலை கல்லூரிகள், மூன்று அரசு உதவிபெறும் கல்லூரிகள், சில தனியார் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மட்டுமே பல்வேறு துறை சார்ந்த பாடப்பிரிவுகள் உள்ளன. இக்கல்லூரிகளில் சேர கடந்த சில ஆண்டுகளாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இக்கல்லூரிகளில் இளங்கலை பிரிவில் ஒரு பாடப்பிரிவிற்கு 40 இடங்கள் மட்டுமே உள்ளன. சில கல்லூரிகளில் சில இடங்கள் மட்டுமே கூடுதலாக உள்ளன. மொத்த கல்லூரிகளிலும் சேர்த்து 2 ஆயிரத்திற்கும் குறைவான இடங்களே உள்ளதால் ஐந்தில் நான்கு பங்கு மாணவர்களுக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவதையடுத்து கலை, அறிவியல் கல்லூரிகள் பக்கம் மாணவர்களின் கவனம் திரும்பியுள்ளது. கலை அறிவியல் பிரிவில் கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், வேளாண் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.