ராமநாதபுரம், டிச.28: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி நடந்த பேட்டை துள்ளலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் புகழ்பெற்ற வல்லபை ஐயப்பன் ஆலயம் உள்ளது. எருமேலிக்கு அடுத்தபடியாக பேட்டை துள்ளல் விழாவும், பம்பைக்கு அடுத்தபடியாக ஆராட்டு விழாவும் ஆண்டுதோறும் இங்கு நடத்தப்படும். இதனால் தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்வார்கள். இந்தாண்டு கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கோயிலில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.