சேதுபாவாசத்திரம், டிச.12: கஜா புயல் கரையை கடந்து 26 நாட்களாகியும் 30 சதவீதம் மட்டுமே மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பல கிராமங்களில் இருளில் மூழ்கி தத்தளிக்கிறது.கஜா புயலின் கோரதாண்டவத்தால் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதிகளில் அதிகளவில் சேதம் ஏற்பட்டது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் முற்றிலும் மின்தடை ஏற்பட்டது.இதையடுத்து கடந்த 26 நாட்களாக இரவு, பகல் பாராமல் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த மின்வாரிய பணியாளர்கள் வேலை பார்த்தும் இதுவரை பேராவூரணி, பெருமகளூர், பூக்கொல்லை, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடைவீதிகளுக்கும், நாடியம், துறையூர் போன்ற ஒருசில குக்கிராமங்களுக்கு மட்டுமே மின் விநியோகம் கிடைத்துள்ளது.