கோவை, டிச. 11: தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த 5ம் தேதி முதல் ஆன்லைன் சான்று வழங்கும் பணிகளை முற்றிலுமாக புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவையில் 165 விஏஓ.,க்கள் நேற்று இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். பணியிடங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். வி.ஏ.ஓ அலுவலங்களில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வரும் கணினி வழி சான்று மற்றும் இணையதள பணிகளுக்கு செலவின தொகையை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 10 வட்டங்களில் உள்ள 165 கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த தாலுக்காக்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், பொதுமக்களிடம் கோரிக்கை அடங்கிய நோட்டீஸ்கள் அளித்தனர். கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டம் காரணமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ், விவசாயிகளுக்கு சிட்டா,அடங்கல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் முடங்கியது.