குடியாத்தம், டிச. 7: குடியாத்தம் அருகே பாலாறு குவாரியில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிய இடத்தை அளவீடு செய்யும் தீவிரமாக நடந்து வருகிறது.வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள பாலாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த 5 ஆண்டுகளாக தடையை நீக்கும்படி 500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.இதையடுத்து, குடியாத்தம் அடுத்த பட்டு பாலாற்றில் கடந்த ஜூலை 23ம் தேதி முதல் 11 மாதத்திற்கு மாட்டு வண்டி மூலம் மணல் அள்ள தமிழக அரசு சார்பில் குவாரி திறக்கப்பட்டது.இந்நிலையில், குடியாத்தம் அடுத்த ஒலக்காசி கிராமத்தை சேர்ந்த மர்ம கும்பல் ஒலக்காசி கிராமம் வழியாக மாட்டு வண்டி செல்வதற்கு மாமூல் கேட்டு கடந்த சில நாட்களாக மாட்டு வண்டி தொழிலாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஒலகாசியை சேர்ந்தவர் பாலாற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது எனக்கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலாற்றில் மாட்டு வண்டியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.