முத்துப்பேட்டை, டிச.5: முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலால் விழுந்த மரங்களை வேளாண்மை துறை மற்றும் வனத்துறையினர் இலவசமாக வெட்டி விற்பனைக்கு அனுப்பும் பணி துவங்கியது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலுக்கு ஏராளமான தென்னை, பனை, மா, பலா, வாழை, தேக்கு உள்ளிட்ட பல்வேறு மரங்கள் விழுந்தது. அதில் அரசுக்கு சொந்தமான சாலையோரம் உள்ள மரங்கள் பொது இடங்களில் உள்ள மரங்கள் என லட்சக்கணக்காண மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதில் தென்னை மரங்கள் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவை விழுந்து அழிந்தது. அதனை அப்புறப்படுத்த கூட வழியின்றி விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண்மை துறை மற்றும் வனத்துறை ஆகிவை இணைந்து விவசாயிகளுக்கு உதவும் வகையில் புயலுக்கு விழுந்த தென்னை மற்றும் பல்வேறு மரங்களை இலவசமாக வெட்டி அகற்றி அதனை நியாயமான விலைக்கு செங்கல் சூளை மற்றும் வெளிமாவட்ட தொழிற்சாலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்து உதவும் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. இதற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளை வேளாண்மை துறையினர் கண்டறிந்து வனத்துறைக்கு பரிந்துரைத்து இலவசமாக வெட்டும் பணி துவங்கப்படும். அதனை வனத்துறையினரே விற்பனை அனுப்ப உதவி செய்வார்கள்.