10 மது பார்கள் இழுத்து மூடல்குமாரபாளையம், நவ.21: திமுகவினரின் கடும் எதிர்ப்பு காரணமாக, குமாரபாளையத்தில் அங்கீகாரமின்றி ஆளும்கட்சியினர் நடத்தி வந்த, 10 மது பார்கள் இழுத்து மூடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மது பார்களுக்கு, கடந்த ஓராண்டாக ஏலம் விடப்படவில்லை. ஆனால், அங்கீகரமின்றி பார்களை நடத்திய ஆளும் கட்சியினர், கூடுதல் விலைக்கு மது மற்றும் உணவு பொருட்களை விற்று வந்தனர். அனுமதியின்றி செயல்பட்டு வந்த 10 பார்கள் குறித்த விபரங்களை கேட்டு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் சேகர், தகவல் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தார். இதில் கடந்த ஓராண்டாக அரசு மதுக்கடைகள் ஏலம் விடவில்லை என தெரியவந்தது. மேலும், ஆளும்கட்சியினரின் ஆக்கிரமிப்பில் பார்கள் இருந்ததும், இதில் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் அரசு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
இதுகுறித்து திமுகவினர் புகார் கொடுத்த போதிலும், போலீசார் மற்றும் கலால் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து சட்டவிரோதமாக செயல்படும் மது பார்களை அகற்றக்கோரி, குமாரபாளையத்தில் மூன்று இடங்களில் திமுக சார்பில் அறிவிப்பு தட்டி வைத்தனர். ஆனால், திமுகவினர் வைத்த தட்டிகளுக்கு அனுமதி பெறவில்லை எனக்கூறி, நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். இதையடுத்து மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை நடத்திய அனைத்துக்கட்சியினர், போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையறிந்த போலீசார், அனுமதியின்றி இயங்கி வந்த 10 மது பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுத்தனர். கடந்த இரண்டு நாட்களாக குமாரபாளையத்தில் 10 மது பார்கள் மூடப்பட்டுள்ளது. மதுக்கடையில் பாட்டில்களை வாங்கும் குடிமகன்கள், சாலையோரம் அமர்ந்து குடித்து வருகின்றனர்.
போலீசாரும் கண்டும் காணாததுமாக இருந்து வருகின்றனர். சந்து கடைகளுக்கு குளு குளு வசதி குமாரபாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பார்கள் மூடப்பட்ட ேபாதிலும், மூன்று சந்து கடைகள், தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த கடைகளுக்கு ஏசி வசதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு குடிமகன்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளி மாநில, வெளிநாட்டு சரக்குகள் தாராளமாக கிடைப்பதால் குடிமகன்கள் கூட்டம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.