குடிபோதையில் சிஆர்பிஎப் வீரர் ரகளை கடை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஆம்லெட் சாப்பிட்டு பணம் தர மறுப்பு

வேலூர், நவ.16: வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பிரட் ஆம்லெட் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்து குடிபோதையில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பாஸ்ட்புட் தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் ஒருவர் குடிபோதையில் பிரட் ஆம்லெட் சாப்பிட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்கவில்லையாம். இதனால் கடைக்காரர் பணத்தை கொடுக்க கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் நான் யார் தெரியுமா? நான் போலீஸ், என்னிடமே பணத்தை கேட்கிறயா? எனக்கூறி அந்த கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்த கடையையும் அந்த நபர் அடித்து நொறுக்கி உள்ளார்.

இதனால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் விைரந்து வந்து அந்த நபரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர் எல்லை பாதுகாப்பு படை வீரர் என்பதும், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் கடையை அடித்து நொறுக்கியதற்காக ₹3 ஆயிரம் பணத்தை கடைக்காரரிடம் தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: