தேனி, நவ.14: தேனியில் சிவாஜி நகர் பகுதியில் குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. தேனி மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுவது அதிகரித்து வருகிறது. இவர்களில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நோயால் இறப்பவர்கள் குறித்து அரசு அறிக்கை வெளியிடாமல் மூடிமறைப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் சுகாதாரத்துறை அலட்சியத்தால் பல இடங்களில் குப்பைகள் குவிந்தும், சாக்கடை நீர் தேங்கியும் உள்ளது. இதனால் கடந்த வாரம் அல்லிநகரம் கம்பர் தெருவை சேர்ந்த திம்முத்தாய் என்ற மாற்றுத்திறனாளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இருந்தபோதிலும் நகராட்சியில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதில் சுகாதாரத் துறை சுணக்கத்துடனேயே நடந்து வருகிறது.