சேலம், நவ.8: சேலத்தில் பட்டாசு வெடித்த போது தீப்பொறி விழுந்ததில், குடோனில் இருந்த நூல்கள் கருகின.சேலம் தாதகாப்பட்டி பெருமாள் கோயில்மேடு, 4வது தெருவை சேர்ந்தவர் அனில்குமார்(41). அதே பகுதியில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள குடிசையை நூல்குடோனாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 8மணியளவில் திடீரென குடிசை தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு திடுக்கிட்ட அப்பகுதி மக்கள், தீயை அணைக்க முயன்றதோடு, தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், சில ஆயிரம் மதிப்புள்ள நூல்கட்டுகள் எரிந்து நாசமானது.