நாகை,நவ.2: காலமுறை ஊதியம் வழங்க கோரி நாகை மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டப்பூர்வமான குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கிட வேண்டும், விலைவாசி உயர்வுக்கேட்ப மாணவர்களுக்கான உணவு செலவின தொகையை ரூ.5 உயர்த்திட வேண்டும், மகப்பேறு விடுப்பு 9 மாதமாக உயர்த்திட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நாகை ஒன்றியம் சார்பில் நாகை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம், ஒன்றிய தலைவர் சசிக்கலா தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், வட்ட செயலாளர் தமிழ்செல்வம், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க முத்துகிருஷ்ணன் மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.